தேர்தலுக்காக 'டாஸ்மாக்' கடைகளில் முன்கூட்டியே மதுபானங்கள் பதுக்கல்
சென்னை: சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், 'டாஸ்மாக்' கடைகளில் மது விற்பனையை தேர்தல் கமிஷன் கண்காணிக்கும். அப்போது, மது வகைகளை அதிகம் வாங்கி சிக்கி கொள்ளக் கூடாது என்பதற்காக, தற்போதே, அரசியல் கட்சியினர், மதுபானங்களை வாங்கி பதுக்கி வருகின்றனர்.
இதனால் மது விற்பனை, 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், 4,787 கடைகள் வாயிலாக, மதுபான வகைகளை விற்கிறது. அவற்றில் தினசரி விற்பனை, சராசரியாக 150 கோடி ரூபாயாகவும், விடுமுறை நாட்களில், அதை விட அதிகமாகவும் உள்ளன.
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவோருக்கு, கட்சியினர், 'குவார்ட்டர்' மது பாட்டில், பிரியாணி, 'பேட்டா' எனப்படும் தினசரிப்படியான ரொக்கம் வழங்குவது வழக்கம்.
சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரலில் நடக்க உள்ளது. தேர்தல் தேதி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது. அறிவிப்பு வெளியான நாளில் இருந்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும். அன்று முதல் தினசரி மதுக் கடைகளில் நடக்கும் விற்பனையை, தேர்தல் ஆணையம் கண்காணிக்கும்.
மொத்தமாக, மது பாட்டில்களை வாங்கி எடுத்து சென்றால், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்வர்.
எனவே, இந்த பிரச்னைகளில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க, கட்சியினர் தற்போது, மது வகைகளை அதிகளவில் வாங்கி, பதுக்கி வருகின்றனர்.
இது குறித்து, டாஸ்மாக் அதிகாரி கூறியதாவது:
மது விற்பனை முழுதும் கணினி மயமாக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு கடையிலும், தினமும் எவ்வளவு மதிப்பிற்கு மது வகைகள் விற்பனையாகின்றன, இருப்பில் உள்ள மது வகைகள், வசூல் தொகை உள்ளிட்ட விபரங்களை, அதிகாரிகள் இணையதளத்தில் அறிய முடியும். கடந்த சில தினங்களாக, பல கடைகளில் தினமும் சராசரியாக இரண்டு முதல் ஐந்து பெட்டிகள் வீதம், கூடுதல் மது வகைகளை வாங்குகின்றனர்.
ஒரு பெட்டியில், 180 மி.லி., உடைய, 48 குவார்ட்டர் பாட்டில் உள்ளன. இதனால் வழக்கத்தை விட மது விற்பனை, 10 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு தேர்தல் முக்கிய காரணமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement
பணமும் சாராயமும் கட்சிக் காரர்களுக்கு வந்து சேர்ந்துவிட்டது.பறக்கும் படையிடம் அதிகம் மாட்டாது.
டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என்று பாஜக அதிமுக கூட்டணி வாக்குறுதி அளிக்க வேண்டும் என்று மக்கள் கூறுகின்றனர்.
கம்பெனிகள்தான் நேரடியாகவே சப்ளை செய்கிறார்கள் அதனால அரசு கஜானாவுக்கு வரவேண்டிய கணிசசமான அளவு பணம் வருவதில்லை என தமிழக முன்னாள் நிதி அமைச்சர் 4 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிவிட்டார். ஆகவே தட்டுப்பாடு எதுவும் இருக்காது 3 ஷிப்ட்டும் வேலை செய்து வேண்டிய அளவுக்கு மடையை திறந்து விடுவார்கள்.
கள்ள மார்க்கெட் சரக்கு கிடைப்பதில் என்றும் சிக்கல் இல்லை. தேர்தல் நேரத்தில் பாரா மிலிட்டரியை வைத்து தேர்தல் நடத்தினால் ஓரளவுக்கு நேர்மையாக தேர்தல் நடக்கும். இல்லை என்றால் பணநாயகம்தான் வெற்றி பெரும்.

கவலையே வேண்டாம்! குவட்டடர், பிரியாணி, துட்டு நிச்சயம் ஒவ்வொரு தேர்தல் கூட்டத்திற்கும், உங்கள் ஓட்டுக்கும்! தமிழகத்தில் தமிழனின் தன் மானத்தை காக்கும் கட்சியின் சேவை நாட்டுக்கு தேவை! மக்கள் விழிப்புடன் இல்லாவிட்டால் இந்த மாதிரி கவரும் கழகம் நான் ஆட்சி அமைக்கும்!