வேட்புமனு தாக்கலா? கோடை இன்ப சுற்றுலாவா?
பா.ம.க., வேட்பாளர்களின் வெற்றியை பாதிக்காத வகையில், ராமதாஸ் அறிவித்த வேட்பாளர்களை வசப்படுத்த அன்புமணி தரப்பு வியூகம் வகுத்து வருகிறது.
பிளவுபட்ட பா.ம.க.,வில், ஒரு சிலரை தவிர முக்கிய நிர்வாகிகள் பலரும் அன்புமணிக்கு ஆதரவாக உள்ளனர். தே.ஜ., கூட்டணியில் பா.ம.க., வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
அ.தி.மு.க., - பா.ஜ., மீதான அதிருப்தியில் இருந்த ராமதாஸ், சசிகலாவுடன் புதிய கூட்டணியை உருவாக்கினார். மேலும், பா.ம.க., வேட்பாளர்கள் அனைவரையும் தோற்கடிக்க ராமதாஸ் தீர்மானித்தார்.
இதற்காக, தனது ஆதரவாளர்களை வேட்பாளர்களாக அறிவித்து வருகிறார். இதனால் பா.ம.க., வேட்பாளர்களின் வெற்றிக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என, அன்புமணி தரப்பு புது வியூகம் வகுத்தது.
இதுகுறித்து அன்புமணி தரப்பு நிர்வாகிகள் கூறியதாவது: ராமதாஸ் அணி வேட்பாளர்கள் கேட்கும் கட்சி பதவி, அடுத்தடுத்த தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பு உள்ளிட்ட சலுகைகள் தரப்படும். ஒரே நிபந்தனை, தற்போதைய தேர்தலில் வேலை செய்யாமல் ஒதுங்கி நிற்க வேண்டும் என்பது மட்டும் தான்.
ராமதாசுக்கு பின், அன்புமணியே கட்சியை வழிநடத்துவார் என்பதால், இந்த தேர்தலுடன் தங்களது எதிர்காலம் பாழாகிவிடும் என அவர்களும் அஞ்சுகின்றனர். இதனால், அன்புமணியின் வியூகத்திற்கு சம்மதம் தெரிவிக்க தயாராகி வருகின்றனர். இவர்கள், வரும் 6ம் தேதிக்குள் மனு தாக்கல் செய்வரா அல்லது கோடை சுற்றுலா செல்வரா என்பது விரைவில் தெரியவரும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்