கூட்டணி கட்சிகளுடன் பேச்சு நடத்த தி.மு.க., சார்பில் குழு அமைப்பு
சென்னை: கூட்டணி கட்சிகளுடன் பேச்சு நடத்த, தி.மு.க., பொருளாளர் பாலு தலைமையில் ஏழு பேர் அடங்கிய குழுவை, அக்கட்சியின் பொதுச்செயலர் துரைமுருகன் அறிவித்து உள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், 'தொகுதி உடன்பாடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சு நடத்த, தி.மு.க., பொருளாளர் பாலு தலைமையில், அமைச்சர்கள் நேரு, வேலு, பன்னீர்செல்வம், துணை பொதுச்செயலர்கள் சிவா, ராஜா, அமைப்பு செயலர் பாரதி ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது' என கூறியுள்ளார்.
தி.மு.க., தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில், காங்., - ம.தி.மு.க., - வி.சி., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, மக்கள் நீதி மய்யம், தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஆதித் தமிழர் பேரவை ஆகிய கட்சிகள் உள்ளன. கூட்டணியில் தே.மு.தி.க.,வும் இணைந்துள்ளது.
தி.மு.க.,வுடன் தொகுதிப் பங்கீடு பேச்சு நடத்த, ஐந்து பேர் குழுவை, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே கடந்த நவ., 22ம் தேதி அறிவித்தார். மூன்று மாதங்களாகியும், காங்கிரசுடன் தி.மு.க., அதிகாரப்பூர்வமாக எந்த பேச்சும் நடத்தவில்லை.
இது குறித்து காங்., மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர் தன் அதிருப்தியை பகிரங்கமாக வெளிப்படுத்தினார். இந்நிலையில், நேற்று ஏழு பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது.
தி.மு.க., அமைத்துள்ள குழுவினர், முதலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் இன்று பேச்சு நடத்துகின்றனர். முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளான மார்ச் 1ம் தேதி, தொகுதிப் பங்கீடு அறிவிக்கப்படும் என, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையே, ம.தி.மு.க., சார்பில் தி.மு.க-.,வுடன் பேச்சு நடத்த, நான்கு பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
Advertisement

பெட்டிக் கணக்கு விவாதக் குழு