பெரம்பூரில் விஜய் வேட்பு மனு நிராகரிப்பா?
சென்னை: சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கில், த.வெ.க., தலைவர் விஜய் தாக்கல் செய்த வேட்பு மனுக்களில் முரணான தகவல்கள் இருப்பதால், அவை நிராகரிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
த.வெ.க., தலைவர் விஜய், சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். கடந்த மார்ச் 30ம் தேதி, சென்னை பெரம்பூரில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தன் மீது எவ்வித குற்ற வழக்கும் இல்லை என விஜய் தெரிவித்து இருந்தார்.
தொடர்ந்து, திருச்சி கிழக்கு தொகுதியில் நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதில், கடந்த 2025ம் ஆண்டு மதுரையில் நடந்த மாநாட்டின்போது, தன் பாதுகாவலர்கள் தாக்கியதாக கூறப்படும் புகாரில், கூடக்கோவில் போலீசில் வழக்கு பதியப்பட்டுள்ளதாக விஜய் குறிப்பிட்டுள்ளார்.
அதோடு, இந்த குற்ற வழக்கு பற்றி, காவல் துறையிடமிருந்து எந்தவித சம்மனோ, தகவலோ வரவில்லை எனவும் இப்போது தெரிய வந்ததால், இதில் குறிப்பிட்டுள்ளதாகவும் காரணத்தை விஜய் கூறியுள்ளார்.
இதனால், பெரம்பூரில் தாக்கல் செய்த விஜயின் வேட்பு மனு நிராகரிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
ஆனால், வேட்பு மனு பரிசீலனை செய்யும்போது, வழக்கின் தகவல்கள் குறித்து, தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் விஜய் தரப்பினர் தெரிவிக்க உள்ளனர். அதோடு, ஒரு நபர், ஒரு தொகுதியில் நான்கு மனுக்கள் வரை தாக்கல் செய்ய விதிகள் உள்ளன.
ஏற்கனவே, விஜய் இரண்டு மனுக்களை தாக்கல் செய்துள்ள நிலையில், கூடுதலாக இரண்டு மனுக்களை அவர் தாக்கல் செய்தால் போதுமானது என, த.வெ.க., தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கையில் தான் வேட்பு மனுவை ஏற்பது தொடர்பான முடிவு உள்ளது.
மேலும், சென்னை கொளத்துாரில் பிரச்சாரம் செய்யும்போது, விதிகளை மீறியதாக விஜய் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளதாகவும், திருச்சி கிழக்கில் தாக்கல் செய்த வேட்பு மனுவில் விஜய் குறிப்பிட்டுள்ளார். அந்த தகவலையும் பெரம்பூர் மனுவில் இணைக்க உள்ளார்.
அதேபோல், பெரம்பூரில் தாக்கல் செய்த வேட்பு மனுவில் தன் வயது 52 என விஜய் குறிப்பிட்டுஉள்ளார். ஆனால், திருச்சி கிழக்கில் 51 என விஜய் குறிப்பிட்டுள்ளார்.
விஜயின் வேட்பு மனுவில் இப்படி முரணான தகவல்கள் இடம்பெற்று இருப்பதால், அவை பற்றி விசாரணை நடத்தப்பட உள்ளதாக, தேர்தல் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Advertisement

பலரும் மனைவியை டம்மி மாற்று வேட்பாளராக போட்டு தேர்தல் மனு தாக்கல் செய்கின்றனர். உங்களால் அப்படி முடியாவிட்டால் அட்லீஸ்ட் 3வையாவது மாற்று வேட்பாளராக போட்டிருக்கலாம்.