தோல்வி தான் பா.ஜ.,வுக்கு பலன் தரும்!
சி ல வாரங்களுக்கு முன்பு வரை, அனைத்து ஊடக விவாதங்களிலும், 'பா.ஜ., தேசிய தலைமையின் ஆட்டத்திற்கு அ.தி.மு.க., அடிபணிந்து ஆடுகிறது' என்று பெரும்பாலான பத்திரிகையாளர்கள் பேசி வந்தனர். ஆனால், இப்போது தான், உண்மையான நிலை வெளிப்படுகிறது. அதை பார்க்கும்போது, தொகுதி ஒதுக்கீட்டில் துவங்கி எதிர்காலம் வரை, அ.தி.மு.க., கூட்டணியால், பா.ஜ.,வுக்கு எதுவுமே சாதகமாக இல்லை என்று தெரிகிறது.
கணக்கில் சறுக்கல்
கடந்த 2024 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., 20.46 சதவீத ஓட்டுகளையும், தனித்து நின்ற பா.ஜ., 11.24 சதவீத ஓட்டுகளையும் பெற்றிருந்தன. இந்த ஓட்டு சதவீதத்தின் அடிப்படையில் பார்த்தால், குறைந்தபட்சம் நான்கு தொகுதிகளுக்கு ஒரு தொகுதி வீதம், 4:1 என்ற கணக்கில், பா.ஜ.,வுக்கு 40 தொகுதிகளாவது ஒதுக்கப்பட்டு இருக்க வேண்டும்.
ஆனால், ஆறு தொகுதிகளுக்கு ஒன்று, அதாவது 6:1 என்ற கணக்கில் அ.தி.மு.க., அளித்த இடங்களை எந்த மறுப்புமின்றி பா.ஜ., ஏற்றுக்கொண்டது. இது, தேர்தலுக்கு முன்பாகவே, அக்கட்சி தனக்குத்தானே தேடிக்கொண்ட அரசியல் நட்டம்.
வாசனின் த.மா.கா.,வும் இதர கட்சிகளும் தாமரை சின்னத்தில் போட்டியிட்டு, மொத்த தொகுதிகள் 33 ஆக உயர்ந்தாலும், ஒட்டுமொத்தமாக பா.ஜ.,வின் ஓட்டு விகிதம் 4 முதல் 5 சதவீதமாக தான் வரும்.
பழனிசாமியின் ராஜதந்திரம்
தற்போதைய தி.மு.க., ஆட்சியை கவனித்தால், பா.ஜ.,வுக்கு எதிரான அதிரடி நிலைப்பாடுகளை அவர்கள் சாமர்த்தியமாக தவிர்ப்பதை காண முடியும்.
பரந்துார் விமான நிலைய எதிர்ப்பு போராட்டங்கள், பெரிய அளவில் பரவாமல் ஆளும் தி.மு.க., அரசே பார்த்துக் கொண்டது
சென்னை -- சேலம் எட்டுவழிச் சாலை திட்டத்தை கைவிடுவதாக இதுவரை அறிவிக்கவில்லை
பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டத்தை ஒருமுறை அனுமதித்த ஸ்டாலின், இரண்டாவது முறை அதற்கு அனுமதி தரவில்லை
தேர்தல் ஆணையத்தின் விதிகளையும், முன்னாள் கவர்னர் ரவியின் பல்கலை வேந்தர் பதவியையும் தி.மு.க., அரசால் சட்டரீதியாக முழுமையாக எதிர்க்க முடியவில்லை.
ஆனால், பழனிசாமி முதல்வராக இருந்த காலகட்டம் இதற்கு நேர்மாறானது. தனக்கு வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் பா.ஜ.,வின் வளர்ச்சியை அவர் திட்டமிட்டு தடுத்தார்.
நெடுவாசல், கதிராமங்கலம், ஸ்டெர்லைட் மற்றும் எட்டுவழிச் சாலைக்கு எதிரான போராட்டங்கள்; நீட் தேர்வு எதிர்ப்பு; ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலத்திற்கு அனுமதி மறுப்பு; பிரதமர் மோடிக்கு எதிரான கருப்புக்கொடி போராட்டம் என, 2019 தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தில் பா.ஜ.,வுக்கு எதிரான மனநிலை வலுவடைவதை பழனிசாமி அனுமதித்தார்.
கடந்த 2019 லோக்சபா தேர்தலுடன் நடந்த சட்டசபை இடைத்தேர்தலிலும் இது வெளிப்பட்டது. தன் ஆட்சியை தக்கவைக்க, தேவையான இடங்களில் வெற்றி பெற்ற அ.தி.மு.க., அதே தொகுதிகளில் லோக்சபாவிற்கு போட்டியிட்ட பா.ஜ., மற்றும் பிற கூட்டணி கட்சிகளை வெற்றிபெற வைக்க, எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
வளர்ச்சிக்கு வழியில்லை
அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பா.ஜ., தனது கட்சி வளர்ச்சிக்கான எந்த அரசியலை தமிழகத்தில் முன்னெடுக்க முடியும்? மத்திய அரசின் திட்டங்களை தி.மு.க., எதிர்த்தால், பழனிசாமியும் அதையே செய்வார்.
வரும் 2029 லோக்சபா தேர்தலை மனதில் கொண்டு, ஆளும் அரசுக்கு எதிராக, பா.ஜ.,வால் எதையும் வெளிப்படையாக பேச முடியாது.
அதேசமயம், தி.மு.க., ஆட்சியில் இருந்தால், நீட், கல்வி கொள்கை, சட்டம் - -ஒழுங்கு, தேசிய பாதுகாப்பு போன்ற விவகாரங்களில் பா.ஜ.,வால் மத்திய அரசின் மூலமாகவோ, நீதிமன்றங்கள் மூலமாகவோ மாநில அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடியும். அரசியல் ரீதியாகவும் தி.மு.க.,வை எதிர்ப்பதன் மூலம் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ள முடியும்.
குறைந்த தொகுதிகளை, எவ்வித எதிர்கால திட்டமுமின்றி ஏற்றுக்கொண்டதன் மூலம், அ.தி.மு.க., தமிழகத்தில் தனது 20 சதவீத ஓட்டு வங்கியை தக்கவைத்துக் கொள்ள, பா.ஜ.,வே வழிவகுத்துக் கொடுத்துள்ளது.
பா.ஜ.,வுக்கு சில சட்டசபை உறுப்பினர்கள் கிடைக்கலாம் என்ற சிறிய லாபத்தைத் தவிர, ஒட்டுமொத்த அரசியல் லாபமும் அ.தி.மு.க.,வுக்கே. எனவே, நீண்டகால அடிப்படையில் பார்த்தால், இந்தச் சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணி தோல்வியடைவதே தமிழக பா.ஜ.,வின் வளர்ச்சிக்கு நல்லது; அ.தி.மு.க.,வின் எதிர்காலமும் கேள்விக்குறியாகும்.
இன்றைய நிலையில், கூட்டணியால் அதிக பலன் அடையப்போவது பழனிசாமி மட்டுமே. கூட்டணி வென்றால் அவர் முதல்வர்; தோற்றால் பிரதான எதிர்க்கட்சி தலைவர்.
gperumal143@gmail.com
Advertisement
இதெல்லாம் பிஜேபி அறியாதது அல்ல. இப்போது திமுகவை தோற்கடிக்க வேண்டும். வேறு வழி இன்றி அதிமுக வை அட்ஜஸ்ட் செய்து போகிறது பிஜேபி. தேர்தல் முடிந்து எடப்பாடி முதல்வர் ஆனால் மத்திய அரசை அனுசரித்து செல்வார். மேலும் ஒன்று தேர்தலுக்கு பின் அண்ணாமலை மீண்டும் பிஜேபி தலைவர் ஆவார். எடப்பாடி எதிர்த்தால் பிஜேபி அவருக்கு தக்க பாடம் கற்பிக்கும்
உண்மையான கணிப்பு சொந்த செலவிலேயே சொந்தக் கட்சிக்கு சூனியம் வைக்கும் தலைவர்கள் தமிழக பாஜகவில் இருக்கும் வரை அந்தக் கட்சியின் நிலைமை கேவலமாக தான் இருக்கும்
பழனிசாமி தேர்தலில் ஜெயித்து முதல்வர் ஆவதை விட அதிமுக கட்சியை தன் கட்டுப்பாட்டில் வைப்பதை தான் மிகவும் விரும்புகிறார்
பழனிசாமி யின் செயல்பாடுகள் விஜய்யின் கூற்றை மெய்யாக்குவது போல் உள்ளது......
போட்டி திமுக Vs தவெக
கூட்டணியால் நஷ்டப்பட போவது இரண்டு கட்சிகளும் தான்.....
தோல்வி அடைந்தால்.... அதிமுக அழியும்.....மிச்ச மீதி உள்ளவர்களும் திமுக பக்கம் போய் விடுவார்கள்..... அதுதான் பழனிசாமி யின் திட்டம்..... அவரும் வசதியாக வாழலாம்.....
நானும் வழி மொழிகிறேன். மேலும் தமிழக பஜகவில் மூத்த தலைவர்கள் சிலரின் அண்ணாமலை எதிர்ப்பும் முடிவுக்கு வரும் என்று நம்புகிறேன்.
அறிய படத. பெயர். நபர் எல்லாம். இப்ப வெளிய வருது அவனவன் தனக்கு தோன்றியதை அடித்து விடு ராண் ஆனால் மக்கள் தெளிவாக உள்ளனார்

இருக்குற தமிழ் தலிவர்களை நீக்கிட்டு வடக்ஸ் தலவர்களைப் போட்டால் கட்சியும் வளரும். இந்தியும் வளரும்.