பிரசார வாகனங்களை தேர்தல் அதிகாரிகள் ஆய்வு
புதுச்சேரி: அரசியல் கட்சிகளின் பிரசார வாகனங்களை தேர்தல் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
புதுச்சேரி சட்டசபைக்கான தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு வரும் 9ம் தேதி நடக்கிறது. இதையொட்டி கடந்த 16ம் தேதி முதல் மனு தாக்கல் நடந்து வருகிறது. தேர்தல் தேதி நெருங்குவதால், வாக்காளர்களைக் கவர அரசியல் கட்சிகள் இப்போதே தயாராகி வருகின்றன.
தேர்தல் பிரசாரத்திற்காகப் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. அதன்படி, புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது பிரசார வாகனங்களை அந்தந்தத் தொகுதி தேர்தல் அதிகாரிகளிடம் (ஆர்.ஓ.,) காண்பித்து உரிய அனுமதி பெற வேண்டும்.நேற்று அந்தந்தத் தொகுதிகளில் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் பிரசார வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
வாகனத்தின் ஆர்.சி. புக் இன்சூரன்ஸ், டிரைவிங் லைசன்ஸ் மற்றும் வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள ஒலிபெருக்கிகளின் அனுமதி உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டன.
ஆவணங்கள் சரியாக உள்ள வாகனங்களுக்கு மட்டுமே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டது.
உரிய அனுமதியின்றி அல்லது ஆவணங்களின்றி பிரசாரத்தில் ஈடுபடும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவை உடனே பறிமுதல் செய்யப்படும் என, அதிகாரிகள் எச்சரித்தனர்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்