மாவட்ட தேர்தல் துாதுவரான தேர்தல் தேனீ வெளியீடு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் சட்டசபை தேர்தலில் நுாறு சதவீத ஓட்டுப்பதிவினை வலியுறுத்தி மாவட்ட தேர்தல் துாதுவரான தேர்தல் தேனீ போஸ்டரை மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இயற்கை சிறப்பம்சங்களில் முக்கியமானது கல்வராயன்மலை ஆகும். இயற்கை வளமும், தேனீக்களும் இந்த மலைப்பகுதியில் நெருங்கிய தொடர்புடையவை. மலையும், தேனீயும் ஒன்றை ஒன்று பிரிக்க முடியாதவை எவ்பதால், தேர்தல் தேனீ எனும் விழிப்புணர்வு கருத்து மூலம் வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
இந்த தேர்தல் தேனீ, கிராமம் முதல் நகரம் வரை பறந்து சென்று, ஒவ்வொரு குடிமகனும் தங்களின் ஓட்டுரிமையை தவறாமல் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. ஒரு ஓட்டும் வீணாகாது, ஒவ்வொரு ஓட்டும் தேன் துளி போன்றது என்ற அடிப்படையில் தேனீ கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் தேர்தல் துாதுவராக செயல்பட்டு, மக்களிடம் ஜனநாயக பொறுப்பை உணர்த்துகிறது.
மாவட்டம் முழுவதும் அனைத்து தரப்பு மக்களிடமும், விழிப்புணர்வு ஏற்படுத்தி 100 சதவீத ஓட்டுப்பதிவு என்ற இலக்கை நோக்கி நகர்த்தப்படுகிறது. எனவே மாவட்டத்தில் தேர்தல் நாளன்று அனைவரும் தவறாமல் ஓட்டளித்து, ஜனநாயக கடமையினை நிறைவேற்ற வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
இதில் டி.ஆர்.ஓ., ஜீவா, மகளிர் திட்ட இயக்குனர் லலிதா, உதவி இயக்குனர் (பயிற்சி) சுபதர்ஷினி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்