/ செய்திகள் /  தி.மு.க., கூட்டணி குறித்து இரண்டு நாளில் அதிகாரப்பூர்வ பேச்சு: கிரிஷ் ஷோடங்கர்

 தி.மு.க., கூட்டணி குறித்து இரண்டு நாளில் அதிகாரப்பூர்வ பேச்சு: கிரிஷ் ஷோடங்கர்

சென்னை: “கூட்டணி குறித்து கனிமொழியிடம் பேசினேன். இன்னும் இரு நாட்களில், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ பேச்சு துவங்கும்,” என, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர் கூறினார். தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர் நேற்று முன்தினம் சென்னை வந்தார். நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த அவரை, காங்கிரஸ் ஐவர் குழு சந்தித்து பேசியது. தி.மு.க.,விடம் குறைந்தபட்சம் 36 தொகுதிகளை பெற்றாக வேண்டும் என, அவரிடம் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில், காமராஜர் அறக்கட்டளை பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற பின், கிரிஷ் ஷோடங்கர் அளித்த பேட்டி: கூட்டணி தொடர்பாக, தி.மு.க., - எம்.பி., கனிமொழியிடம் மொபைல் போனில் பேசினேன். இன்னும் இரு தினங்களில், தி.மு.க.,வுடன் மீண்டும் பேச இருக்கிறோம். 'ஆட்சியில் பங்கு குறித்து, காங்கிரஸ் எங்களிடம் பேசவில்லை' என, தி.மு.க., செய்தி தொடர்பாளர் இளங்கோவன் கூறியிருப்பது பற்றி எனக்கு தெரியாது. விரைவில் அதிகாரப்பூர்வமாக அக்கட்சி தலைமையிடம் பேசுவோம். இவ்வாறு அவர் கூறினார். தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில், “மகாத்மா காந்தி பெயரை, ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திலிருந்து நீக்கியதை கண்டித்து, நாளை மறுதினம் மிகப்பெரிய பாதயாத்திரை பயணம் துவங்க உள்ளோம். “தமிழகம் முழுதும் ஆறு மண்டலங்களில், இந்த பாதயாத்திரை நடக்க உள்ளது. இதில் கிரிஷ் ஷோடங்கர், தேசிய பொதுச்செயலர் வேணுகோபால் பங்கேற்கின்றனர்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !