அய்யனார் ஆசியால் குஷி: கிளி ஜோசியம் பார்த்த பச்சான்

கடலுார் லோக்சபா தொகுதி பா.ம.க., வேட்பாளர் பிரசாரத்திற்கிடையே கிளி ஜோசியம் பார்த்து வெற்றி களிப்பில் மூழ்கினார்.

கடலுார் லோக்சபா தொகுதியில் பா.ம.க., வேட்பாளராக சினிமா இயக்குனர் தங்கர் பச்சான் போட்டியிடுகிறார். கூட்டணி கட்சியினருடன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள அவர், சுட்டெரிக்கும் வெயிலுக்கு இளைப்பாறுவதற்காக வழியில் உள்ள மரத்தின்நிழலில் ஒதுங்கினார்.

அந்த மரத்தடியில் கிளி ஜோதிடர் ஒருவர் அமர்ந்து ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தார். அதை பார்த்த தங்கர் பச்சான், கிளி ஜோதிடரின் அருகில் அமர்ந்து, 'நடக்க உள்ள லோக்சபா தேர்தலில் நான் வெற்றி பெறுவேனா?' என, ஆர்வமாக கேட்டார்.

'என் கிளி கடந்த காலம், நிகழ் காலம், வருங்காலம் என அனைத்தையும் தெளிவாக கூறி விடும்' என தெரிவித்த கிளி ஜோதிடர், கூண்டில் இருந்த கிளியை வெளியே அழைத்து, தங்கர் பச்சான் பெயருக்கு சீட் எடுத்து தருமாறு கூறினார்.

பல சீட்டுகளை நிதானமாக எடுத்து போட்ட கிளி, அய்யனார் படத்தை எடுத்துக் கொடுத்து, தங்கர் பச்சானை ஒரு பார்வை பார்த்துவிட்டு கூண்டுக்கு திரும்பியது.

'வெற்றி நிச்சயம்' என கிளி ஜோதிடர் அடித்து கூற, 'நமக்கு அய்யனார் ஆசீர்வாதம் வழங்கி விட்டார். இனிமேல் கவலையில்லை' என, தங்கர் பச்சான் மகிழ்ச்சியாக வாகனத்தில் ஏறி பிரசாரத்தை தொடர்ந்தார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்