என் மீது வழக்கு போடுங்கள், பார்க்கலாம்…: இபிஎஸ் சவால்
வாழப்பாடி: கருணாநிதி சிறைவைக்கப்பட்டது குறித்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராஜா பேசியதாக வெளியாகியுள்ள வீடியோ குறித்து என் மீது வழக்கு போடுங்கள் பார்க்கலாம் என அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் கூறியுள்ளார்.
சேலம் மாவட்டம், ஏற்காடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாழப்பாடியில் இபிஎஸ் பேசியதாவது:
நன்றி மறந்து
திமுக கூட்டணியில் நிறைய கட்சிகள் என்கிறார் ஸ்டாலின். ஆனால் வாக்கு இல்லையே? அதிமுகவில் கூட்டணி எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் வலிமையானது. வாக்கு வங்கி நிறைந்த கட்சிகள். 2021ல் திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள்தான் தொடர்கின்றன. ஒரேயொரு கட்சி சேர்ந்திருக்கிறது, தேமுதிக. நாம் கஷ்டப்பட்டு உழைத்து வாய்ப்பு கொடுத்தோம், நம்மை மறந்துவிட்டார்கள். வென்டிலேட்டர் பொருத்தப்பட்ட கட்சி அது. நாம் தான் உதவி செய்தோம், உதவி மறந்து நம்மை பேசுகிறார்கள்.
அதிமுகவைப் பொறுத்தவரை உதவி செய்பவர்களை ஏணியில் ஏற்றிவிடுவோம், திமுக உச்சியில் ஏறும்போது ஏணியை புடுங்கிவிடுவார்கள். 2021ல் இருந்த கூட்டணி, விசிக, கம்யூனிஸ்ட், இஸ்லாமியக் கட்சிகள் எல்லாம் திமுகவை தாங்கிப் பிடித்தார்கள். அப்படி முட்டுக்கொடுத்த கட்சிகளுக்கு என்ன நிலைமை.?
இறுதித்தேர்தல்
நான் முதல்வராகி பெரும்பான்மையை நிரூபிக்கும்போது ஸ்டாலின் செய்த அட்டூழியம் கொஞ்சநஞ்சமல்ல. சட்டமன்றத்தில் கேவலமாக நடந்தார். பெரும்பான்மையை நிரூபித்ததும் சட்டையைக் கிழித்துக்கொண்டு வீதியில் சென்றார். இப்போது அதிமுக பெரும்பான்மை இடங்களில் வென்று ஆட்சி அமைக்கும், அப்போது ஸ்டாலின் மனநிலை எப்படியிருக்கும் என்று நீங்களே கற்பனை செய்யுங்கள். அப்பா ஸ்டாலின், மகன் உதயநிதி, கனிமொழி என ஆளாளுக்கு பேசுகிறார்கள். யார் வேண்டுமானாலும் பேசட்டும், இது திமுகவுக்கு இறுதித் தேர்தல் என்று மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். அவர்கள் குடும்பத்தைத் தவிர்த்து யாராவது பேச முடியுமா?
இன்று பத்திரிகையில் பார்த்தேன், என் மீது வழக்கு போடுகிறாராம். போடுங்கள். பல வழக்குகளைப் பார்த்தவன். ஆ.ராஜா பேசும் ஆடியோ வைரலானது, அதில் பேசியிருந்ததைச் சொன்னேன். அப்படி பேசியவர் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை. ராஜா மீது நடவடிக்கை எடுத்தால் அடுத்த ஆடியோ விட்டுவிடுவார். அதற்கு என்மீது கோபப்பட்டு என்ன பிரயோஜனம்?
ஆடியோவில் வந்த செய்தி உண்மையாக இருக்கலாம். 2021 தேர்தல் அறிக்கையில் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது, யாராக இருந்தாலும் விடமாட்டேன் என்றார். இதே கருத்தை நானும் சொல்கிறேன். கருணாநிதி எதிரியாக இருந்தாலும், வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டாரா என்று விசாரிக்கப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதுவும் முன்னாள் முதல்வர் விவகாரம். எனவே, விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். யாராக இருந்தாலும் கவலையில்லை. இவ்வாறு இபிஎஸ் பேசினார்
Advertisement

வழக்கு போடுவதற்கு ஏதாவது மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் அது உங்களிடம் இருக்கிறதா
வடிவேலு பட காமெடி மாதிரி இருக்கிறது இது