தி.மு.க., வைத்த 'செக்'; மாணிக்கம் தாகூர் விலகல்
சென்னை: தேர்தல் பொறுப்பில் இருந்து, விருதுநகர் காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் ராஜினாமா செய்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்புக்குழு தலைவராக, மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டார். த.வெ.க., கூட்டணியில் காங்கிரசை எப்படியாவது இடம்பெற வைக்க வேண்டும் என படாதபாடு பட்டார். திரைமறைவில் வேகமாக காய் நகர்த்தினார். ஆனாலும், அவருடைய முயற்சிக்கு எந்த பலனும் கிட்டவில்லை.
தி.மு.க.,வுடன் தொகுதி பங்கீட்டை பேசி முடித்து, 28 இடங்களையும் ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவியையும் பெற்று விட்டது காங்கிரஸ் தலைமை.
இதயடுத்து, தி.மு.க.,வை கடுமையாக விமர்சித்த மாணிக்கம் தாகூர் ஆதரவாளர்கள் தேர்தலில் போட்டியிட்டால், வேலை செய்ய மாட்டோம் என, தி.மு.க., மாவட்டச் செயலர்கள், தங்கள் கட்சி தலைமையிடம் தெரிவித்து விட்டனர்.
இதையடுத்து, தொகுதி பங்கீட்டில் மாணிக்கம் தாகூர் தன்னுடைய ஆதரவாளர்களை களம் இறக்க திட்டமிட்டு இருந்த மதுரை வடக்குத் தொகுதியை, காங்கிரசுக்கு கொடுக்காமல் விட்டு விட்டது தி.மு.க., தலைமை. அதோடு, தென் மாவட்டங்களில் தன்னுடைய விருப்பத்தை கேட்காமல் விட்டது தமிழக காங்., தலைமை.
இதனால், விரக்தி அடைந்த மாணிக்கம் தாகூர், காங்., தேர்தல் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக, கட்சி தலைவர் கார்கேவிற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இதையடுத்து, தென் மாவட்டங்களில் உள்ள தி.மு.க.,வினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 'இனி, தென் மாவட்டங்களில் காங்., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றிக்காக, காங்கிரசாருடன் இணைந்து செயல்படுவோம்' என்றும் சொல்கின்றனர்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்